Saturday, October 03, 2009

கணி்னிக் கல்வியின் எதிர்காலம்? இ-தேனி.காம் மோகன்!



கணி்னிக் கல்வியின் எதிர்காலம்? இ-தேனி.காம் மோகன்!

http://www.tamilvanigam.com/index.php/historymaker/802-2009-10-03-13-02-56.html




வணக்கம். இந்த பேட்டி வாயிலாக தமிழ் வணிகம் வாசகர்களுடன் என்னை பற்றியும் எனது பங்களிப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு தமிழ்வணிகம்.காம் தளத்தினருக் நன்றி.இதோ உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:
உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்
எனது பெயர் மோகன் கிருட்டிணமூர்த்தி. நான் மத்திய கிழக்கில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணிணிப் பாதுகாப்புத் துறையில் பணி புரிகிறேன். இ(E) தேனீhttp://www.etheni.com/ எனும் தமிழ் தளத்தை நடத்தி வருகிறேன். என்னுடைய இணையத் தளத்தில் மற்ற விபரங்களை காணலாம் http://www.leomohan.net/
முதன் முதலில் எழுத வாய்ப்பு எப்படி வந்தது? நீங்களாக தேடியதா? அல்லது வாய்ப்பு உங்களை தேடி வந்ததா?
எழுதும் வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் இரண்டு வகையான எழுத்துக்களை பற்றி சொல்ல வேண்டும்.
ஒன்று கணினி புத்தகங்களை எழுதுவது. இந்த வாய்ப்பு எனக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் என்னுடைய கணிப்பொறி பட்டயங்களை இணையத்தில் கண்டு என்னை தொடர்பு கொண்டது. இதுவரை 7 கணினி தொழில்நுட்ப சம்பந்தமான புத்தகங்களை வேறு பலருடன் சேர்ந்து எழுதியுள்ளேன். இதனை சிங்கரெஸ் http://www.syngress.com எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 8வது புத்தகம் விரைவில் வர இருக்கிறது.
தொழில்நுட்பமல்லாத புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை என்னுடைய புத்தகங்கள், புதினங்கள், கதை, கட்டுரைகள் அச்சில் வந்தது இல்லை. இவற்றை நான் மின் புத்தங்களாக http://www.esnips.com/web/leomohan எனும் தளத்திலும் என்னுடைய வலைப்பூ http://tamilamudhu.blogspot.com விலும் வெளியிடுகிறேன். இணைய வாசகர்கள் படித்துக் கருத்திடுவார்கள். மேலும் தமிழ் மன்றங்களிலும் கூகிள் தமிழ் குழுமங்களிலும் பதிக்கிறேன்.
இவை அல்லாமல் Gulf Daily News http://www.gulf-daily-news.com எனும் பஹ்ரைன் தினசரி என்னுடைய ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவான அதாவது சமூகம் அரசியல் கல்வி கலாச்சாரம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உள்ளன.
உங்கள் முதல் புத்தகம் எழுதும் அனுபவம் எப்படி இருந்தது? தகவல்களைத் திரட்டுவதற்குச் சிரமப்பட்டீர்களா?
அச்சில் வந்த முதல் புத்தகம் என்றால் அது கணிணிப் புத்தகம் தான். நான் இந்தத் துறையில் பல ஆண்டுகளாக இருப்பதாலும் அந்தத் தலைப்பில் தேவையான மென்பொருட்களைப் பயன்படுத்தி இருந்ததாலும் அதிக சிரமமாக இல்லை.
உங்களுடைய புத்தகம் எழுதும் அனுபவத்தில் சுவராஸ்யமான தகவல்களைக் கூறுங்களேன்.
கணிணிப் புத்தகத்தை விட என்னுடைய தமிழ் புதினங்களைப் பற்றி சொல்லலாம். “மேற்கே செல்லும் விமானம்” எனும் தலைப்பில் ஒரு பாரம்பரியத் தமிழன், அமெரிக்காவில் ஓர் அமெரிக்கப் பெண்மணியிடம் காதல் கொள்ளும் அழகிய கதை. முதல் பகுதி எழுதி வெளியிட்டவுடன் இணைய வாசகர்கள் பலர் முடிவு சோகமாக இருக்கிறது என்றும் அந்தக் காதலர்கள் இணைய வேண்டும் என்றும் வேண்டினர். அதனால் இரண்டாம் பகுதி எழுதத் துவங்கி அந்தப் புதினம் இதுவரை நான்கு பாகங்கள் வெளியிடும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. இணைய வாசகர்களின் ஆதரவும் ஊக்கமும் மிகவும் முக்கியமானது. என்னுடைய குடும்பத்தினரும் அதை ஆவலுடன் படித்து கருத்துத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அந்தக் கதையை பாராட்டி என் தந்தை ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னால் என்னென்ன செய்வீர்கள்? வாசகர்களுக்காக விளக்குங்களேன்.
கணிணிப் புத்தகம் என்றால்
1. இதுவரை அந்த தலைப்பில் வேறு புத்தகங்கள் வந்திருக்கிறதா?
2. இதுவரை வந்த புத்தகங்களில் வெளியான தகவல்களிலிருந்து விலகி புதிய தகவல்கள் தர முடியுமா?
3. எளிமையான வாசகங்கள் கொண்டு கடினமான தகவல்களை சொல்வது எப்படி?
4. நிறைய படங்கள் வரைந்து பெரிய கருத்துக்களை எளிமையாக தருவது எப்படி?
இவ்வாறெல்லாம் யோசிப்பேன்.
Fiction எனும் இலக்கிய வடிவங்களில் எழுதும் போது பேச்சுத்தமிழில் இயற்கையாக தோன்றும் வண்ணம் வசனங்களையும், எங்கெல்லாம் தூய தமிழ் பயன்படுத்தமுடியுமோ அங்கு பயன்படுத்தியும், இன்றைய தலைமுறை தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கலாச்சாரம், தொழில்நுட்பம் இவற்றுடனும் அதே சமயத்தில் கலாச்சாரம், பண்பாடு இவற்றை சம அளவுகளில் கலந்து கொடுக்க முயற்சி செய்வேன்.
இதுவரை ஆங்கிலம்/அரபி மொழிகளில் புத்தகம் எழுதும் நீங்கள் ஏன் தாய் மொழி தமிழில் எழுதவில்லை? தமிழில் உங்களைப் போன்றோர்கள் தாரளமாக எழுதலாமே.....
தமிழில் கதை, கவிதை, கட்டுரைகளை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் தமிழில் ஒரு கணினி தொழில்நுட்பப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. நண்பர் முத்தமிழ்மன்ற ரத்தினகிரியின் எளிய தமிழ் தொழில்நுட்பத் தொடர்கள் என்னை எப்போதும் இந்தக் கனவை நோக்கி இழுக்கும். விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.

கணினி தாக்குதல் குறித்து உங்களது கருத்து.... கணினியை பொறுத்தவரை நாள்தோறும் தினமும் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? அவற்றை எப்படித் தீர்க்கலாம்.
இதைப்பற்றி நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்வது இது தான். உலகம் தோன்றியதிலிருந்து நல்லதுக்கும், கெட்டதுக்கும் இடையில் இருக்கும் போராட்டம் தோன்றி அது உலகும் அழியும் வரையில் தொடரும். எவ்வாறு நாம் பிள்ளைகளை சரியாக வழிநடத்த அங்கு போகாதே, இங்கு போகாதே நேரமானதும் வீட்டிற்கு வந்துவிடு குடிக்காதே போதை பொருளுக்கு அடிமையாகாதே என்றெல்லாம் அறிவுரை செய்கிறோமோ அதுபோலவே இணையத்தில் போகக்கூடாத இடங்கள் பல உள்ளன. நம்மையும் அறியாமல் இந்தத் தளங்களை பல விபரீதமான மென்பொருட்களை கணினிக்குள் நுழைத்துவிடுகின்றன.
இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை இவ்வுலகில் என்பதை உணரவேண்டும். இலவசங்களுடன் பல பிரச்சனைகளும் கூடவே வரும். அதனால் நல்ல தளங்களுக்கு மட்டும் செல்ல வேண்டும். தெரிந்த மென்பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை காசு கொடுத்து மென்பொருட்கள் வாங்குவது நல்லது. அல்லது நல்ல தளங்களிலிருந்து திறவுமூல (open source) மென்பொருட்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.
நச்சு நிரல்களை அழிக்கப் பயன்படுத்தும் மென்பொருட்களை எப்போதும் புதுமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இயன்ற அளவிற்கு பிறருடைய வன்தட்டுக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். கணினி பாதுகாப்பிற்காக இணைய தளங்களில் கிடைக்கும் அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும். நச்சு நிரல்களினால் வரும் சிரமங்கள் நீங்கும். தகவல் பாதுகாப்பாக இருக்கும்.
கணிணித் தாக்குல்கள் குறித்து சீனா பற்றி செய்திகளே அதிகமாக வருகின்றன. உண்மையில் சீனா தான் அனைத்தையும் செய்கிறதா?
அனைத்தும் கணினி மயமானதால் பலரும் கணினி மூலம் தகவல்களை சேகரிக்க முயல்கின்றனர். காவல் துறையும் சரி, துப்பறியும் துறையும் சரி அல்லது சதிகாரர்களும் கூட கணினி மூலம் இணையம் மார்க்கமாக பல தகவல்களை திரட்டுகின்றனர். வேண்டாதவர்கள் தளங்களை தாக்கியோ பலமிழக்கச் செய்தோ அல்லது தாமதப்படுத்தியோ தங்கள் நோக்கத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.
சில தாக்கர்கள் (Hackers) அரசாங்க உதவியுடனும் இதை செய்கின்றனர். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் பெயர் அடிக்கடி அடிபடுகின்றன. இன்னும் சில சிறிய நாடுகளும் இந்தக் காரியங்கள் செய்வதாக தெரிகிறது. தீவிரவாதிகளும் இந்தப் புதுமையான தொழில்நுட்பப் புரட்சி மூலம் தங்களுடைய பழைய தீவிரவாத நோக்கங்களுக்கு புதிய ஆயுதமாக இந்த தாக்குதல்களை செய்கின்றனர். இதில் உண்மை என்ன என்று அறிவது மிகவும் கடினம்.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கணினி சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இந்நிலையில் இப்போதுள்ள மாணவர்கள் என்ன செய்யலாம்.?
கணினி என்பதை முதல் பாடமாக ஏற்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினி அறிவு என்பது இப்போது அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுவதால் அதை முதல் பாடமாக கொண்டு படிக்காமல் இதுவரை பயின்று வந்த பொறியியல், மருத்துவம், கலை சார்ந்த பாடங்களைத் தொடர்ந்து படித்துவிட்டு கணினியை தனிப்பட்ட முறையில் கற்கலாம். மருத்துவத் துறைகளில் பல நிபுணத்துவங்கள் (Specialisation) வந்துள்ளன.
மைக்ரோ பயாலாஜி எதிர்காலத்திற்கும் மிகவும் உதவும் என்கிறார்கள். விஞ்ஞான விவசாயம், விமானத்துறை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கணினி சார்ந்த படிப்பு என்பது கழுவும் மீன்களில் நழுவும் மீன் போல. இன்று இருக்கும் முக்கியத்துவம் நாளை இருப்பதில்லை. ஆனாலும் அதை முற்றிலும் புறக்கணிக்க இயலாது. அதனால் நாம் இதனை நம் முழுநேரமாகப் பயிலாமல் பகுதி நேரமாகப் பயில்வது நல்லது. முழு நேரத்திற்கு உதவும் நிலையான கல்வி திட்டங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
நன்றி. வணக்கம்.

Monday, June 22, 2009

இன்னும் பெயர் வைக்கவில்லை-9

9

எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள குறையால். அடுத்து என்னை சுற்றி இருப்பவர்களின் கண்டிப்புகளால். இப்போது இந்த மருத்துவரின் பரிசோதனைகள். என்னையும் என்னுடைய சமுதாயத்தில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த மரியாதையையும் வைத்து.

எனக்கு ரதீஸனின் மேல் மிகவும் கோபமாக வந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். என்னை தேட வேண்டாம். மனம் அமைதியானதும் திரும்பி வருகிறேன். தற்கொலை செய்துக் கொள்ள மாட்டேன். கவலை வேண்டாம் என்று எழுதிவிட்டு கொஞ்சம் பணமும் சில துணி மணிகளும் எடுத்துக் கொண்டு அன்றே இரவோடு இரவாக புறப்பட்டேன்.

கயலை நினைத்து வருத்தமாக இருந்தது. அம்மா அழுது புலம்புவாள். ஆனால் எனக்கு வேறு வழி தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவு எடுக்கும் சக்தியை இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

டில்லிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு ரயிலில் வந்து அமர்ந்தேன். சுற்றும் முற்றம் அனைவரும் என்னை பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. நேராக கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டேன். சாதாரணமாக தான் இருந்தது. யாரும் என்னை பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டேன். எனக்கு உள்ளே இருக்கும் பிரச்சனை வெளியே தெரிய வாய்ப்பில்லை என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எனக்கு எதிரே ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பழுத்துப் போன தாடி, 70 வயது மேலிருக்கும் போல் இருந்தது. காவி உடைகள் ஏதோ ஒரு சாமியார் என்பதை உறுதிபடுத்தியது. ஒரு ஜோல்னா பையில் ஏதோ வைத்திருந்தார். கையில் ஒரு ஆங்கில புத்தகம். கண்ணாடி இல்லை.

ரயில் பயணம் துவங்கி இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை பார்க்கிறார் என்பதை அறிந்ததும் நான் அவருடைய பார்வைகளை தவிர்த்தேன்.

ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் பார்க்கிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். என் மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அவரை உற்றுப் பார்த்தேன்.

தம்பி உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்று பேச்சை துவக்கினார்.

என்னையா கேட்கறீங்க பெரியவரே என்றேன் தெரியாதது போல.

ஆமாம் பா. உன்னைத்தான்.

ஒன்னும் பிரச்சனையில்லையே.

ஓ அப்படியா. எங்கே போயிகிட்டு இருக்கே.

இந்த டிரயினும் டெல்லி தானே போகுது. எல்லாரை மாதிரியும் நானும் டெல்லி தான் போறேன் என்றேன் காட்டமாக.

ஹா ஹா. இந்த டிரெயின் டெல்லி தான் போகுது. ஆனால் எல்லோரும் டெல்லி போகலை. வழியில பல தடவை நிக்கும். அங்கெல்லாம் மக்கள் இறங்குவாங்க தெரியுமா என்றார் அவரும் விடாமல்.

இலக்கில்லா பயணம் என்பது அவர் சொன்னதும் உறைத்தது.

டெல்லி தான் போறேன் என்றேன்.

அப்படியா டெல்லில எங்கே என்றார்.

அட இவர் விடமாட்டார் போலிருக்கிறதே.

டெல்லில எங்கே போனா என்ன உங்களுக்கு பெரியவரே என்றேன் மிகவும் காட்டமாக.

அட ஏம்பா கோவிக்கறே. 30 மணி நேர பயணம். பேசிக்கிட்டே போலாம் தான் என்றார் சற்றே என்னை அமைதிப்படுத்தும் முயற்சியுடன்.
தெரியலை என்றேன். எனக்கும் யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது.

எங்கிருந்து வரே

மெட்ராஸ்.

என்ன வேலை பாக்கறே

வேலையில்லை

அப்ப வேலை தேடி போறியா

ஆமாம்

அங்கே உனக்கு யாரையாவது தெரியுமா

தெரியாது.

எனக்கு அங்கே நிறைய பேரை தெரியும். வேலை வாங்கித் தரட்டுமா.

அவருடைய ஆர்வத்தை ஏன் கெடுப்பானேன் என்று நினைத்துக் கொண்டே, ஓ தாராளமா. அட்ரஸ் போன் தாங்க நான் போய் பாக்கறேன்.

ஓ. அவசியம் தரேன். அங்கே போய் எங்கே தங்கப்போறே.
தெரியலை.

ம்ம். சரி. எனக்கு தெரிஞ்ச ஆசிரம்ம் ஒன்னு இருக்கு. நான் அங்கே தான் போறேன். என்னோட வரியா.

ம் என்றே என்ன செய்வது என்று தெரியாமல்.

வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா

அடப்பாவி. என் முகத்துல எல்லாம் எழுதி ஒட்டியிருக்கும் போல என்று முகத்தை துடைத்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா

இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

அப்ப அம்மா அப்பாவோட சண்டையா.

பெரியவரே நீங்க ரொம்ப குடைஞ்சி குடைஞ்சி கேள்வி கேட்கறீங்க. என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. ஏதோ பேச்சுத் துணைக்குன்னு சொல்லிட்டு ரொம்ப ப்ர்ஸனலா பேசறீங்க என்றேன் கடுகு வெடிப்பது போல்.

கோச்சிக்காதேப்பா என்றார் மீண்டும். நடு நடுவில் அவர் எழுந்து செல்வதும் பல நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமருவதுமாக இருந்தார். அதுவும் எனக்கு எரிச்சலாக இருந்தது.

அவருடைய கண்களில் ஒரு ஒளி இருந்தது. அவருடைய குரலில் என்னை தாலாட்டும் அன்னையின் அரவணைப்பு இருந்தது. அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஆனால் அவர் கேட்கும் கேள்விகள் தான் எனக்கு கோபத்தை தந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்விகளில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி நானே கேள்விகளை கேட்க ஆரம்பிப்பது தான். அப்பாடா என் புத்தி இன்னும் மழுங்கவில்லை என்று என்னுடைய சாமார்த்தியத்தை பாராட்டிக் கொண்டே அவரை துளைக்க ஆரம்பித்தேன் என் கேள்விகள் மூலம்.

உங்க பேரு என்ன பெரியவரே.

ஹாத்தீம்

என்ன ஹாத்தீமா. முஸ்லீம் பெயரா இருக்கே.

ஆமாம். அதுல என்ன இப்போ.

இல்லை. பார்த்தா...

பார்த்தா ஹிந்து சாமியார் மாதிரி இருக்கா

ஆமாம். மதம் மாறிட்டீங்களா

இன்னொரு மதத்தை பின்பற்றனும்னா அந்த மதத்துக்கு மாறனும்னு
அவசியமா. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று போட்டியில் அவரே இன்னும் வென்றுக் கொண்டிருந்தார்.

இல்லை. ஆனா...

ஆனா என்ன.

ஹிந்து முஸ்லீமாகி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முஸ்லீம் ...

தம்பி நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி எடுத்துக் கனும். இது ஒரு
தேடல். அந்த தேடல் இன்னும் முடிவாகலை

என்ன தேடறீங்க

அது தெரியலை

என்ன தொலைச்சீங்க

அதுவும் தெரியலை

என்ன தொலைச்சீங்கன்னும் தெரியலை என்ன தேடறீங்கன்னும் தெரியலை உங்களுக்கு.

உனக்கு தெரியுமா. எங்கே போறேன்னும் தெரியலை எதுக்கு போறேன்னும் தெரியலை என்றார் என்னை மடக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டே.

சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம்.

நீங்க புரியாத புதிரா இருக்கீங்க. இல்லாட்டி என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க என்றேன் ஹாத்தீம் காவி உடையை அணிந்துக் கொண்டு என் முன்னால் அமர்ந்திருக்கும் குழப்பம் தீராமல்.

இப்பதானே பார்த்தே. அதுக்குள்ளே என்னை எப்படி புரிஞ்சிக்க முடியும். அதை விடு. எனக்கு வாழ்கை முடிவுல இருக்கு. இப்பவோ அப்பவோ. நீ வாழ வேண்டிய வயசு. உனக்கு என்ன பிரச்சனையின்னு சொல்லு. என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கறேன். எனக்கும் கொஞ்சம் வாழ்கையில் அனுபவம் இருக்கு.

டாக்டர் ரதீஸனிடம் சொன்னது போல் முதலில் இருந்து ஆரம்பித்து வக்கீலான கதை வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். யமுனாவின் மீது வண்டி சென்றுக் கொண்டிருந்தது.

அவர் தன்னுடைய பொருட்களை ஒரு பாலீத்தீன் கவரில் கட்டினார். எனக்கும் ஒரு பாலீத்தீன் உறையை கொடுத்து என்னுடைய பொருட்களையும் கட்டச் சொன்னார். பிறகு என்னுடன் வா என்று என்னை அழைத்தார், என்னவென்று கேட்கத் தோன்றாமல் அவர் பின்னால் நடந்து வண்டிப் பெட்டியின் கதவின் அருகில் வரைச் சென்றோம்.

வண்டி பாலத்தின் மீது சற்றே மெதுவாகச் சென்றது. என்ன நடக்கிறது என்பதை நான் உணருவதற்குள் என்னை ஆற்றில் சட்டென்று தள்ளிவிட்டு அவரும் பின்னாலேயே குதித்தார். கத்துவதற்கு கூட தெரியாமல் நீரின் ஆழத்தில் கலந்தேன்.

தொடரும்.....

Wednesday, June 17, 2009

இன்னும் பெயர் வைக்கவில்லை - 8

8

மோகன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். இது அவனுக்கு புதிய வேலை. ஒருவர் கதை சொல்லி அதை எழுதுவது. கதை எழுதுவது என்பது ஒரு கைதேர்ந்த மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சை போன்றது. மருத்துவருக்கு அனைத்து அத்தியாயங்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். சிகிச்சை ஆரம்பித்த பிறகு நடுவில் இதயத்தை அறுப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க முடியாது. அல்லது கடைசியில் எப்படி முடிக்கப் போகிறோம் என்று நடுவில் திணற முடியாது.

கதையாசிரியருக்கும் அதே நிலைமை தான். ஒரு வரி கதை கொண்டு எழுது ஆரம்பிப்பது என்பது வியாபார ரீதியாக எழுத தான் முடியும். மாதம் ஒரு முறை பாக்கெட் நாவல் எழுதுவது இந்த ரகம். Quantity இருக்கும் Quality இருக்காது. அது போலவே எழுதுவதை தொழிலாக கொண்டு எழுதுபவர்களும். இந்த பிரசுரத்திற்கு எழுதி தரவேண்டும் அந்த பிரசுரத்திற்கு எழுதி தர வேண்டும். எதை எழுதினாலும் படிப்பார்கள். எதை எழுதினாலும் வெளியிட்டு விடுவார்கள். ஒரு தடவை பெயர் கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நாமே வெளியிடும் போது தரம் நாம் சொல்லும் தரம் தான். இப்படி பல விதங்கள்.

தொலைகாட்சி தொடர்கள் எப்போதும் இந்த ரகத்தை சேர்ந்தவை. கதை எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொண்டே போகும். மக்கள் மத்தியில் பெயர் கிடைத்துவிட்டதென்றால் இன்னும் கொஞ்சம் இழுக்கலாமே என்று இயக்குனர் சொல்ல கதையாசிரியர் பேனாவில் மை நிரப்ப ஆரம்பித்துவிடுவார். பிறகு தயாரிப்பாளர் விளம்பரதாரருடன் TRP rating வைத்து வியாபாரம் செய்ய துவங்குவார்.

மோகன் எழுதும் இந்த கதைக்கு பிரசுரகர்த்தா தேவையில்லை. அச்சு வேலை இல்லை. ஏனென்றால் இதற்கு ஒரே ஒரு வாசகன் தான். கதிர் எனும் கதிரவன். அவனும் படித்து கருத்திடப் போவதில்லை. படிப்பவனுக்கு இதை எழுதியது மோகன் எனும் எழுத்தாளன் என்று தெரியப்போகிறதா என்பதும் தெளிவில்லை.

இது ஒரு மருந்து. முதல் முறையாக மருந்து தயாரிப்பில் ஒரு பகுதி நேர எழுத்தாளன். இணையத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வளரும் ஒரு எழுத்தாளன். இவனுக்கு இவனுடைய கதைகள் அச்சில் ஏறி பார்த்து பழக்கம் இல்லை. அதனால் image எனும் தொல்லையும் இல்லை. விரும்பியதை எழுதுவான். படித்தால் படிப்பார்கள். படித்தவர்கள் கருத்திட்டால் இடுவார்கள். இல்லையென்றால் இல்லை.

ஆனால் இங்கு இவனுக்கு ஒரு பிரச்சனை. கதை அத்தியாயம் ஒவ்வொன்றாக எழுத வேண்டும். முடிவு என்ன என்று இவனுக்கே தெரியாது. இது ஒரு வரி கதையின் கருவை விட மோசம். இதற்கு முன் இவன் மனதில் தோன்றிய பல கருக்கள் கதையாகாமலேயே மறைந்துவிட்டிருந்தது. காரணம் இதை எங்கோ படித்தது போல் இருக்கிறது, இது ஒரு ஆங்கிலப் படத்தில் வந்த கதை மாதிரி இருக்கிறதே இதுபோலவே முன்னொரு முறை ஒருவர் எழுதியிருக்கிறாரே என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று ஒரு பயம் தான். இதனாலேயே பல ஆண்டுகளாக கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். சில பிரபல எழுத்தாளர்களின் கதைகளை பற்றி பிறர் பேசுவதையும் கேட்பதை தவிர்ப்பான். பாதிப்பு எந்த வகையில் படிப்பவர்கள் மீது ஏற்படுகிறதோ அதே பாதிப்பு எழுதவர்கள் மீதும். எழுதுபவர்களே வாசகர்களாக மாறும் போது இந்த தாக்கம் அதிகம். காரணம் இப்படி எழுதுவாரோ அப்படி எழுதுவாரோ என்று கதையின் போக்கை அறியும் ஆவல் எழுத்தாளர்களுக்கு அதிகம்.

முடிவு தெரியாமல் கதை எழுத மோகன் தயாராக இல்லை. முழுவதும் கேட்ட பிறகு எழுதுகிறேன் என்று சொன்னால் டாக்டர் ரதீஸன் அதற்கு தயாராக இல்லை.

நடு நடுவில் டாக்டர் இப்படி எழுதினால் என்ன என்று ஆர்வக் கோளாறில் கேட்கப்போக மோஹன், நான் சொன்னதை மட்டும் எழுதுங்க. இது நீங்க எழுதற கதையில்லை. நான் சொல்லி நீங்க எழுதற கதை. நான் டாக்டர் வேலையை செய்யறேன் நீங்க எழுத்தாளர் வேலையை செய்யுங்க என்றார்.

டக்கென்று மோகனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து, தப்பா நினைச்சிக்காதீங்க மோஹன், கதை எழுதறது ஒரு அறுவை சிகிச்சை செய்யற மாதிரி என்று துவங்கி மேல் சொன்ன லெக்சரை மீண்டும் சொன்னார். எனக்கு மட்டும் தான் கதையோட முடிவு தெரியனும். அப்பத்தான் நான் செய்யற ட்ரீட்மெண்ட் சரியா வரும். தயவு செஞ்சி இதை சென்சேஷனலைஸ் பண்ணிடாதீங்க. காரியம் கெட்டுப்போயிடும் என்று பொறுமையாக சொன்னார்.

புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.

தன்னுடைய வாழ்கையில் அவருடைய ஆரம்ப காலம் முதல், படித்தது, பட்டம் பெற்றது, முதல் நோயாளியை அவர் பரிசோதனை செய்தது என்று மெல்ல ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டும் லாவகத்துடன் தன்னுடைய அனுபவங்களை சொல்லி வந்தார்.

ஓ ஒருவேளை கதை எழுதுவது ஒரு கட்டிட கலைஞனின் வேலை போன்றதோ. நல்ல பலமான அடித்தளம் அமைத்து மெதுவாக தளங்களை அமைத்து பிறகு கடைசியில் வெள்ளையடித்து அலங்காரம் செய்து இதோ தயார் என்று சொல்லும் வேலை போலத்தானோ என்று அவன் மனதில் தனியாக ஒரு பாதையில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து சட்டென்று மீண்டு மீண்டும் அவருடன் இணைந்தான் மோகன்.

அவருடைய செல்பேசி ஒலித்தது. என்ன என்றார் சற்றே பதட்டத்துடன். என்ன தான் எதற்கும் பதற்றம் கூடாது என்று அறிவுரை செய்யும் மனோதத்துவ நிபுணராக இருந்தாலும் மனித நேயம் உள்ளிருந்து தலைகாட்டியது.

மோஹன், கதிரை காணோம். என்னோட கொஞ்சம் வர முடியுமா என்றார்.

ஞாயித்து கிழமையும் வெளியே போயிட்டா நான் என்ன செய்யறது என்று தன் மனைவியின் குரலை நாடா இல்லாமலே ஒலி பெருக்கி மூலம் கேட்டது போல் இருந்தாலும் அதை ஒடுக்கிவிட்டு சரி டாக்டர் என்று சொல்லி தன் நீல நிற மாருதி 800ஐ நோக்கி ஓடினான். அவர் காரை சுற்றி வந்து ஏறி அமர்ந்தார்.

தொடரும்...

இன்னும் பெயர் வைக்கவில்லை - 7

7
மருத்துவர் ரதீஸனின் சோதனைக்கு நான் பலியான கதை சொல்லியே ஆக வேண்டும். பல பிரச்சனைகளை சந்தித்தபின்னும் நான் குணா கமல் குண்டக்க மண்டக்க பார்த்தீபன் அந்நியன் விக்ரம் என்று என் காதுபட பட்டப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தவர்கள் ஒரு புறம் இருக்க நானாக போய் ஏதாவது படிக்கப் போய் மாட்டிக் கொண்டு நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்க, எதுவுமே வேண்டாமடா என்று எதையும் படிக்காமல் சில நாட்கள் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து அதை நான் படிக்க வேண்டும் என்றும் அவர் என்னையும் என்னில் ஏற்படும் மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க அவருடைய விருந்தனர் அறையிலேயே என்னை தங்கவும் சொல்லியிருந்தார்.

நோயிலிருந்து முற்றிலும் விட பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் மறுபுறம் என்னை பார்த்த தினமும் வருந்தும் பெற்றோர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் என்னை உந்தித் தள்ளியது. அவர்களுக்கு வந்திருப்பதும் ஒரு நோய் தான். மகனாக நான் பிறந்த நோய். இந்த இரண்டு நோய்களும் குணமாகி மறுபடியும் என்னை தாழந்து பார்த்தவர்களை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற வெறி உருவாகியிருந்த்து. அதனால் ரதீஸன் சொல்லும் எந்த சோதனைக்கும் நான் தயாராக இருந்தேன்.

அவர் கொடுத்த புத்தகத்தை படித்ததால் வந்த வினை இதோ.
---
தோலில் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு ஒருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். வணக்கம் வக்கீல் சார்.

வணக்கம்.

உங்க பேரு.

நான் வக்கீல் சீனிவாசன். என்ன பிரச்சனை சொல்லுங்க என்று கையில் இருந்த கருப்பு அங்கியை சரி செய்துக் கொண்டே கேட்டேன்.

சார் தெருவிலே விளையாடிக்கிட்டு இருந்த ஒரு கொழந்தையை என் தம்பி பைக் ஏத்தி கொன்னுட்டான்.

அடப் பாவமே.

அதுக்கு அந்த தெருவில இருந்த எல்லாரும் சேர்ந்து என் தம்பியை அடிச்சு துவைச்சிட்டாங்க. அவன் இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான்.

ஐய்யோ. அடி பலமா.

இல்லை சார். கண்ணு முழுச்சிகிட்டான். ஆனா இப்ப அந்த கொழந்தையோட அப்பா என் பையன் மேல கேஸ் போட்டுருக்காரு. நீங்க தான் ஏதாவது செஞ்சி அவனை காப்பாத்தனும்.

ஓ. அப்படியா. விபரங்களை கொடுங்க. கேஸை எடுத்துக்கலாம்.
இப்படி நான் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு காவல் அதிகாரி என்னை நோக்கி வந்தார்கள்.

யெஸ் இன்ஸ்பெக்டர். என்ன வேணும்.

கொஞ்சம் தனியா வரீங்களா என்று என் தோளை அமுக்கி ஒரு ஓரத்திற்கு அழைத்து சென்றார் அந்த இருவரில் ஒருவர்.

சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.

நீங்க எந்த வருஷம் சட்டம் முடிச்சீங்க.

வருஷம்....

நீங்க பார் அஸோசியேஷன்ல மெம்பரா

ம்ம்.

எத்தனை வருஷமா லா ப்ராக்டீஸ் பண்றீங்க.

நீங்க எதுக்கு கேட்கறீங்க இதெல்லாம்.

சார் நீங்க லாயரே இல்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.

என்ன விளையாடறீங்களா. நான் லாயர் சீனிவாசன். மெட்ராஸ்ல பெரிய வக்கீல். யாரை வேணாலும் கேட்டுப்பாருங்க.

உங்க சர்டிபிகேட்ஸ் காட்டறீங்களா. வாங்க உங்க வீட்டுக்கு போகலாம் என்று என்னை இழுக்காத குறையாக இழுந்து சென்று ஹயூண்டையில் ஏற்றினார். சில நிமிடங்களில் என் வீடு என்று சொல்லி எங்கோ அழைத்துச் சென்றனர்.

வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு இள வயது பெண்ணும் தென்பட்டனர். அந்த அம்மா என்னை ஓடி வந்து கதிரு இப்ப என்னடா செஞ்சித் தொலைச்சே ஏன்டா போலீஸ் வந்திருக்கு என்ற அழுதுக் கொண்டே வந்து என்னை கட்டிக் கொண்டார்.

யாரு கதிரு என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த காவல்
அதிகாரி, அம்மா இவங்க உங்க பையனா.

ஆமாம் சார்.

என்ன படிச்சிருக்காரு.

எம் எஸ் சி மைக்ரோ பயாலஜி என்று அந்த இளம் பெண் பதிலளித்தாள்.

நீங்க யாரு.

சார் என் பேரு கயல்விழி. இவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

அம்மா, இவரு மைக்ரோ பயாலஜி படிச்சிருக்காருன்னு சொல்றீங்க. இவங்க கதிருன்னு சொல்லி கூப்பிட்டாங்க. இவரோ வக்கீல் சீனிவாசன்னு சொல்லிகிட்டு கோர்ட்ல கேஸெல்லாம் எடுத்துகிட்டு இருக்காரு. என்னம்மா பிரச்சனையெல்லாம்.

சார் என்று அந்த பெண் கயல்விழி ஏதோ சொல்ல முயலும் போது வெள்ளை நிற மாருதி சட்டென்று வந்து நிற்க அதிலிருந்து அறுபது வயது கொண்ட ஒருவர் வந்திருங்கினார்.

காவல் அதிகாரியை பார்த்து கையசைத்தார். என்னை வைத்து அந்த குடும்பத்தை அலசிக் கொண்டிருந்து இரண்டு காவல் அதிகாரிகளும் சட்டென்று அங்கிருந்து விலகினர்.

அந்த அறுபது வயது பெரியவர் கையிலிருந்த பெட்டியை எடுத்து ஒரு ஊசியை எடுத்து என் கைகளில் செலுத்தினார். மெதுவாக கண்கள் இறுக்க நான் மயங்கி விழுந்தேன்.

தொடரும்...