ஞானி பாகம் 5 - 1 தினசரி
1. தினசரி
சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன்.
ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான்.
நான் ஏன் என்று கேட்டேன்.
அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான்.
நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன்.
சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான்.
அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன்.
"என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே நீ" என்று ஆர்வமாகக் கேட்டேன்.
"அதுவா, ஒரு பிரபலமான பேப்பருக்கு" என்றான் வெற்றிக் களிப்பில்லாமல் அமைதியாக.
"ஓ நீ பேப்பரெல்லாம் படிப்பியா?".
"ஏன் படிக்கக்கூடாதா?" என்று சொல்லிக் கொண்டே தன் ஜோல்னா பையிலிருந்து அந்த தினசரி செய்தித் தாளை மேசையின் மீது எடுத்துப் போட்டான்.
"படிக்கலாம், ஆனால் பிச்சைத் தொழிலுக்கும் பேப்பருக்கும் என்ன சம்பந்தம்?" என்று தயக்கமாகக் கேட்டேன்.
"ஏன் சம்பந்தம் இருந்தா தான் படிக்கனுமா?".
"சரி அதை விடு. அப்படி என்ன விஷயமெல்லாம் தெரிஞ்சிகிட்டே, சொல்லு" என்றேன் சமாதானமாய்ப் போய்விடுவதற்காக.
கச்சா எண்ணெய் வீழ்ச்சி, தங்க விலை, தேர்தல் நிலவரங்கள் மற்றும் சமீபத்திய கணினி துறையில் ஒரு பெரிய நிறுவனம் பல பேரை வேலைவிட்டு எடுத்தது வரையில் மூச்சுவிடாமல் சொன்னான். நான் அசந்துப் போனேன்.
"யப்பா. அசத்திட்டே சோனி. ஆனால் இதெல்லாம் படிச்சு உனக்கு என்ன பிரயோசனம்".
"ஏன் வெள்ளத்துல போகும் போது தான் நீச்சல் கத்துப்பியா?"
எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கேட்டேன், "இதெல்லாம் படிச்சு உனக்கு என்ன பிரயோசனம் அதைச் சொல்லு".
"எனக்குப் பிரயோசனம் இல்லாட்டாலும் நாலு பேருக்குப் பிரயோசனம் இருக்கும்லே".
"உன்னைச் சுத்தி இருக்கற அந்த நாலு பேரும் உன்னை மாதிரி பிச்சைக்காரங்க தானே".
"ஏன் நீ இல்லையா" என்றான். எனக்கு மடரேன்று அடி விழுந்தது.
Comments