மலரும் நினைவுகள்:கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு



கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு



கனவுகள் வராத தூக்கம் எனக்கு என்று சொல்லி சந்தோஷப்படுபவன் நான். மன்றத்திலும் பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வாறு இருக்க கடுமையான பணி சுமையினாலும் சில மாற்றம் கண்டுள்ள உணவு, உறக்கம் பழக்கத்தினாலும் இன்று அதிகாலையில் ஒரு கனவு வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு IT Open Minds 2007 எனும் Computer Seminar நடந்தது. அதற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அதில் திறவுமூல மென்பொருட்களை பற்றி பேசிய பேச்சாளர், சபையை பார்த்து Linux ல் பரிட்சயம் உள்ளவர்கள் மேடைக்கு வந்து பேசலாம் என்றார். நான் மேலே சென்று ஒரு பத்து நிமிடம் பேசினேன். பரிசாக ஒரு T-shirt ம் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சு அனுபவங்களை புதுமைபடுத்திச் சென்றது இந்த நிகழ்ச்சி.

பள்ளியில் வருடா வருடம் கலை கழக போட்டி நடக்கும். கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர் ஏதாவது ஒரு பள்ளியில் கூடுவார்கள். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், இசை, வில்லுபாட்டு போன்ற பல போட்டிகள் நடக்கும். சுமார் 64 பள்ளிகள் பங்கு பெறும். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கும். மாவட்ட ஆட்சியர், கல்வி துறை அதிகாரிகள் போன்றவர்கள் வந்து பரிச தருவார்கள். இது ஒரு பெரிய திருவிழா போலவே நடக்கும்.

வருடா வருடம் நான் மட்டும் பங்கு பெறாமல் மற்றவர்களையும் ஊக்குவித்து அவர்களை பங்கு பெறச் செய்து பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு செய்து தந்திருக்கிறேன். மேலும் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர் வேறு. போட்டிகள் எந்த வகுப்பறையில் நடக்கின்றன எந்த நேரத்தில் நடக்கின்றன என்று எழுதி ஒட்டிவிடுவார்கள். சில நேரங்களில் சுமார் 50 பேர் பேச காத்திருக்க நான் பேசி முடித்ததும் முடிவுகளுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த போட்டிக்கு சென்றுவிடுவேன். பிறகு மாலையில் தான் நான் வெற்றி பெற்றேனா இல்லையா என்று தெரியும். ஒரு மாணவர் அதிக பட்சம் மூன்று போட்டிகளில் தான் பங்கு பெற முடியும்.


சரி இப்போது கனவிற்கு வருவோம். நான் இப்போதைய நானாகவே இருக்க ஏதோ ஒரு பெரிய மேல் நிலை பள்ளியில் கலை கழக போட்டி நடைபெறுகிறது. நான் தமிழ் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கட்டுரை போட்டிக்கு பெயர் கொடுத்திருக்கிறேன். தமிழ் பேச்சுப்போட்டி வழக்கப்படி சூடு பறக்க பேசிவிட்டு அடுத்த போட்டிக்கு கலந்துக் கொள்ள சென்றுவிட்டேன்.

இம்முறை சரியாக நிர்வாகிக்கப்படாததால் எந்த போட்டியில் யார் வென்றார்கள் என்று தெரியவில்லை. பரிசளிப்பு வழங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க என்னுடைய heart beat அதிகமாகிக் கொண்டிருந்தது.

சட்டென்று அந்த பள்ளியின் senior மாணவரை பிடித்து சார், எனக்கு போட்டிகளோட முடிவுகள் தெரியனும் என்று சொல்ல, வாங்க என்று அவர் என்னை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொரு registerஆக அவர் திறந்து தேட, சார் தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் கட்டுரை இது மூனுலேயும் தான் கலந்துகிட்டேன். கொஞ்சம் அதை பாருங்க என்று அவரை அவசரப்படுத்த, அவரும் சிரத்தையுடன் ஒவ்வொன்றாக தேடினார்.

பதட்டத்துடன் தமிழ் கட்டுரை போட்டி பட்டியலில் தேட, வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை. பகீரென்றது. செய்யுட்கள் எல்லாம் கோடிட்டு எழுதினேனே என்று வருத்தம். ஆங்கில பேச்சுப் போட்டியின் பட்டியலிலும் என் பெயர் இல்லை. என்னால் நம்ப முடியவில்லை. அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.

சார், எனக்கு வயசாயிடுத்து. இருந்தாலும் கட்டாயம் ஒரு பரிசாவது எனக்கு கிடைக்கும். நீங்க தமிழ் பேச்சுப் போட்டி பாருங்க என்று சொல்ல, அவரும் பாவம் பெரிசு என்பது போல ஆறுதலாக பார்த்தார். முதல் 10 மாணவர்கள் மதிப்பெண்கள் 30, 32, 35 என்றிருக்க என் கண்கள் என்னை தேடி அவசரமாக ஓடின. ம.கி. மோகன் வரவில்லை என்று எழுதியிருந்தது. சார், சார், நான் வந்தேன். நான் பேசினேன் என்றேன் குழப்பத்துடன்.

இருங்க இருங்க ஒருவேளை முதல் தடவை கூப்பிடும்போது நீங்க வந்திருக்க மாட்டீங்க என்று ஆறுதல் அளித்தப்படியே இதோ உங்க பெயர் என்று கொஞ்சம் கீழாக என் பெயர் மீண்டும் தென்பட்டதை காட்ட, 85 என்று இருந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் மேலும் பட்டியலை படிக்க, 88, 89, 91 என்று என்னைவிட அதிகம் நடுவர்களால் மதிப்பளிக்கப்பட்ட மற்ற பேச்சாளர்களின் பெயர்களை கண்டதும் அண்டமே என் மேல் விழந்தது போல் இருக்க, கண்கள் இருட்ட, கண்களில் நீர் பனிக்க விட்டால் தேம்பி தேம்பி அழுதுவிடுவேன் போலிருந்தது. இளைஞர்கள் நம்மை மிஞ்சிவிட்டார்கள். நமக்கு வயதானதால் தான் நம்க்கு பரிசு கிடைக்கவில்லை போலும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அந்த மாணவருக்கு கரகர குரலில் நன்றி சொல்லி விடைபெற்றேன்.
விழித்தெழுந்ததும் கனவு என்னை உருக்கிவைத்திருந்தது. ஞானி சொன்ன கனவு அறிவுரையும் நினைவுக்கு வந்தது.

-மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்